செய்திகள்
மரணம்

திருவாரூர் அருகே பிரிட்ஜ் வெடித்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த முதியவர் பலி

Published On 2020-03-14 10:17 GMT   |   Update On 2020-03-14 10:17 GMT
திருவாரூர் அருகே பிரிட்ஜ் வெடித்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த முதியவர் உடல் கருகி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேரளம்:

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த மணவாலம்பேட்டை மெயின்ரோடு பகுதியில் வசித்து வருபவர் பக்கிரிசாமி (வயது 82), இவரது மனைவி நவநீதம் (75).இவர்களது மகன் ஸ்டாலின் (43) இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இவர்கள் வீட்டின் வெளிப்புறத்திண்ணையில் பக்கிரிசாமியும் வீட்டின் உள்புறம் அவரது மனைவி, மகன் மற்றும் அவரது மனைவி,குழந்தைகள் இரவு வழக்கமாக தூங்கி வருகின்றனர். இவர்களது வீட்டின் வெளிப்புறம் பக்கிரிசாமி தூங்கும் திண்ணையின் அருகில் பழுதான பிரிட்ச் வைத்துள்ளனர்.

அந்த பழுதான பிரிட்ஜ்ஜில் துணிகளை வைத்து பீரோவாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

நேற்று இரவு வீட்டின் வெளிப்புற திண்ணையில் வழக்கம்போல் பக்கிரிசாமி படுத்துதூங்கியுள்ளார். அவது குடும்பத்தினர் வீட்டின் வெளிப்புற கதவை உள்புறமாக பூட்டிவிட்டு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். பக்கிரிசாமி படுத்துள்ள திண்ணையின் அருகில் வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜ் ஜின் மேல் கொசு வத்திசுருள் பொறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று அதிகாலை பிரிட்ஜ்ஜின் மேல் வைக்கப்பட்டிருந்த கொசுவத்திசுருளில் இருந்து தீப்பற்றி பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த துணி கொளுந்து விட்டு எரிந்துள்ளது. பின்னர் பிரிட்ஜில் இருந்த கேஸ் வெடித்து திண்ணையில் படுத்திருந்த பக்கிரிசாமி மீது விழுந்தது. பிரிட்ஜ் வெடித்த சத்தம் கேட்டுவீட்டின் உள்புறத்தில் படுத்திருந்த அவரது குடும்பத்தினர் வெளியில் வந்து பார்த்த போது பக்கிரிசாமி மீது பிரிட்ஜ் விழுந்து எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நன்னிலம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து பக்கிரிசாமி மீது விழுந்து எரிந்து கொண்டிருந்த தீயைய் அணைத்தனர். இதில் உடல் கருகி பக்கிரிசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.

அதனை தொடர்ந்து பலியான பக்கிரிசாமி உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News