செய்திகள்
கோப்பு படம்

அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.20 லட்சம் மோசடி - வாலிபர் கைது

Published On 2020-03-12 14:29 GMT   |   Update On 2020-03-12 14:29 GMT
ராஜபாளையம் அருகே அரசு வேலை வாங்கித்தருவதாக ரூ.20 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:

ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரைச் சேர்ந்தவர் வசந்த் (வயது 38). இவர் தன்னை பல இடங்களில் போலீஸ் என கூறிக்கொண்டு, அரசு வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.

அந்தப்பகுதியைச் சேர்ந்த ராணுவவீரர் ஆனந்த் என்பவரின் மனைவியிடம் ரூ.2 லட்சமும், குறிச்சியார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராமலட்சுமி, சுரேஷ்குமார், செல்வராஜ் உட்பட 12 பேரிடம் ரூ.20 லட்சம் வரை பெற்றுள்ளார்.

வேலை வாங்கித் தராததால் பணத்தை திருப்பிக் கேட்டுள்ளனர். அப்போது அவர் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

எனவே பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் ராஜபாளையம் வடக்கு போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து வசந்த்திடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் வேலை வாங்கித்தருவதாக பலரிடம் பணம் வாங்கியதை ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

மோசடி பணத்தில் 3 கார்கள், நிலம், தோப்பு, வீடு போன்ற சொத்துக்கள் வாங்கியிருப்பதாகத் தெரிகிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News