திண்டுக்கல்லில் கிணற்றில் மிதந்த மூதாட்டி பிணம்
திண்டுக்கல்:
திண்டுக்கல்-பழனிரோடு கருணாநிதி நகரை சேர்ந்த சின்னச்சாமி மனைவி மாரியம்மாள் (வயது70). இவரது கணவர் கடந்த பல வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் மகள் வீட்டில் தங்கி வந்தார்.
இன்று காலை வீட்டில் இருந்த மாரியம்மாள் மாயமானார். அவரது மகள் பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. சிறிது நேரம் கழித்து ரெட்டியார்தோட்டம் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் பெண் உடல் மிதப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இது குறித்து நகர் மேற்கு போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தீயணைப்புத்துறையினர் உதவியுடன் கிணற்றில் கிடந்த பெண்ணின் உடலை மீட்டனர். அப்போது இறந்து கிடந்தவர் மாரியம்மாள் என தெரிய வந்தது. கிணற்றில் தவறி உள்ளே விழுந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? வேறு யாரேனும் தள்ளி விட்டனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.