செய்திகள்
அழகர்கோவில் அருகே கள்ளக்காதலன் வீட்டில் பெண் மர்ம மரணம்
கள்ளக்காதலன் வீட்டில் பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்தவர் மணி. இவரது மனைவி பெரிய கார்த்தி (வயது 40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
சில வருடங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பெரிய கார்த்தி வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அழகர் கோவில் அருகே உள்ள மஞ்சம் பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருடன் குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று பெரிய கார்த்தி வாயில் நுரை தள்ளிய நிலையில் வீட்டில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த சத்திரப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
இதனிடையே பெரிய கார்த்தியின் தாய் பிள்ளை சத்திரப்பட்டி போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக கூறியுள்ளார். அதன்அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரிய கார்த்தி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.