முகப்பேரில் பெண்ணை தாக்கி நகை பறித்த 2 வாலிபர்கள் கைது
அம்பத்தூர்:
முகப்பேர், புகழேந்தி சாலையை சேர்ந்தவர் லதா. அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 21-ந் தேதி கடையில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் லதாவை தாக்கி கீழே தள்ளிவிட்டு 11 பவுன் செயினை பறித்து சென்றனர்.
இதுகுறித்து லதா ஜெ.ஜெ.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் வனித்தா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தனர்.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் லதாவை தாக்கி செயினை பறிக்கும் காட்சி பதிவாகி இருந்தது. இந்த காட்சிகளை வைத்து வழிப்பறி கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் முகப்பேர் பச்சையப்பன் சாலையில் பதுங்கி இருந்த வேலூரை சேர்ந்த கோபி, ஆவடியை சேர்ந்த சிவநேசன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் லதாவை தாக்கி செயினை பறித்ததை ஒப்புக் கொண்டனர். அவர்களிடம் இருந்து 9 பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.