நாகர்கோவில் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
நாகர்கோவில்:
நாகர்கோவில் கோட்டார் பகுதியைச் சேர்ந்தவர் ரவி(வயது56). தொழிலாளி.இவரது வீட்டில் இருந்த தண்ணீர் மோட்டார் நேற்று பழுது ஆனது.
இதையடுத்து அந்த மோட்டாரை ரவி பழுது பார்த்துக் கொண்டிருந்தார். மோட்டாரை சரி செய்த பின்னர் அதனை இயக்க முயற்சி செய்தார். ஆனாலும் மோட்டார் இயங்கவில்லை.
மோட்டாரை அவர் மீண்டும் பழுது பார்த்தார். அப்போது திடீரென மின்சாரம் ரவியை தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். மேலும் அவர் வலிதாங்காமல் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.
படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரவியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கோட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ரவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.