செய்திகள்
மரணம்

நாகர்கோவிலில் மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி

Published On 2020-03-06 09:57 GMT   |   Update On 2020-03-06 09:57 GMT
நாகர்கோவிலில் மின்சாரம் தாக்கி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில்:

கோட்டார் சின்னவண்ணான் விளையைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி ராஜேஸ்வரி, (வயது 67).

இவர்களது மகன் செல்வராஜ். மருமகள் சுமிதா (27). இவர்கள் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். சுமிதா அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை சுமிதா வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார். வீட்டில் ராஜேஸ்வரி இருந்தார். மாலையில் வீட்டை விட்டு வெளியே வந்த ராஜேஸ்வரி, அங்கு நின்ற மின்கம்பியின் எர்த் கம்பி மீது அவரது கைபட்டது.

அதில் மின்கசிவு இருந்ததால் ராஜேஸ்வரி தூக்கி வீசப்பட்டு மயங்கி கீழே விழுந்தார். அப்போது பள்ளி சென்ற சுமிதா வீட்டிற்கு வந்தார். வீட்டின் வெளியே மாமியார் ராஜேஸ்வரி விழுந்து கிடப்பதை பார்த்த அவர், மாமியாரை தூக்க முயன்றார்.

அப்போது சுமிதா மீதும் மின்சாரம் பாய்ந்தது. ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார். இதையடுத்து மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. பின்னர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராஜேஸ்வரியை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர், இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து ராஜேஸ்வரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இது குறித்து சுமிதா நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News