தஞ்சையில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக தரம் உயர்த்தப்பட்டு பழைய பஸ் நிலையம் , திருவையாறு பஸ் நிலையம், சிவகங்கை பூங்கா ,காமராஜர் மார்க்கெட் உள்ளிட்ட 14 இடங்களில் ரூ.904 கோடி மதிப்பு பல்வேறு பணிகள் நடந்து வருகிறது .
இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி பணிக்காக திருவையாறு பஸ் நிலையத்தில் இருந்த கட்டிடங்கள் இடிக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியில் தஞ்சை அடுத்த மாரியம்மன் கோவில் பிராந்தையை சேர்ந்த சரவணன் (வயது 30) ஈடுபட்டிருந்தார். அப்போது கட்டிடங்களை இடிக்கும் போது மேலே சென்ற மின் வயர் மீது எதிர்பாராத விதமாக அவரது கை பட்டது. இதில் மின்சாரம் தாக்கி சரவணன் தூக்கி வீசப்பட்டார். உடல் கருகிய நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரவணன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.