செய்திகள்
பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தபோது எடுத்த படம்.

குமரி மாவட்டத்திற்கு பறவைகள் வரத்து குறைந்தது

Published On 2020-02-28 09:19 GMT   |   Update On 2020-02-28 09:19 GMT
சாமிதோப்பு உப்பளத்தில் இன்று காலை பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது. நவீன கேமராக்கள் உதவியுடன் பறவைகள் வருகை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்திற்கு பறவைகள் இனங்கள் வருகை குறித்து ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வனத்துறை சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்பு இன்றும் (28-ந்தேதி), நாளை (29-ந் தேதி) நடக்கிறது. பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர், இயற்கை ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் பலர் ஈடுபட்டனர். 6 குழுக்களாக பிரிந்து சென்று கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டனர்.

சாமிதோப்பு உப்பளத்தில் இன்று காலை பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது. நவீன கேமராக்கள் உதவியுடன் பறவைகள் வருகை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது புதிய வகை பறவைகளும் கணக்கெடுப்பில் தென்பட்டன.

தேரூர், சுசீந்திரம், மாணிக்கப்புத்தேரி குளம், மணக்குடி காயல், தத்தையார் குளம், பால்குளம், ராஜாக்க மங்கலம் பகுதிகளிலும் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடந்தது.

பூ நாரை, மஞ்சள் மூக்கு வாத்து, மீன் கொத்தி, தவிட்டு கொக்கு, வெண் கொக்கு, முக்குளிப்பான், வர்ண நாரை, கூழக்கடா, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த கென்டீஸ் புளோவர், ஊசிமுனைவால் வாத்து, கார்கனி, மீசை டேன், ஆற்றுடேன் உள்பட 42 வகையான பறவைகள் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

பறவைகள் வரத்து வழக்கத்தைவிட இந்த ஆண்டு மிக குறைவான அளவே இருந்தது. காலை 5 மணிக்கு தொடங்கிய கணக்கெடுக்கும் பணி 9 மணி வரை நடந்தது.

இதுகுறித்து பறவைகள் ஆர்வலர் டேவிட்சன் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி இன்று நடந்தது. வழக்கமாக தென்படும் பறவைகளை விட இந்த ஆண்டு மிக குறைவான அளவே பறவைகளை காணமுடிந்தது. வழக்கமாக சுமார் 15 ஆயிரம் பறவைகளை பார்க்க முடியும். ஆனால் இன்று 2500 பறவைகள் மட்டுமே தென்பட்டது. பறவைகளின் வரத்து 75 சதவீதம் குறைந்து விட்டது. இதற்கு காரணம் காலசூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றம்.

பறவைகள் வாழிடங்கள் அழிக்கப்படுவதாலும் பறவைகள் வரத்து குறைவதற்கு காரணமாக அமைகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News