செய்திகள்
காரிமங்கலம் அருகே கள்ளத் துப்பாக்கியுடன் 2 பேர் கைது
காரிமங்கலம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் கள்ளத் துப்பாக்கியுடன் வந்த 2 பேரை கைது செய்தனர்.
தர்மபுரி:
காரிமங்கலம் காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் சம்பத் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இரண்டு வாலிபர்கள் கையில் துப்பாக்கியுடன் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றனர். இதனைப் பார்த்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சம்பத் வாகனத்தை நிறுத்தக்கோரியும் அவர்கள் நிறுத்தாமல் வேகமாக சென்று விட்டனர். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் விரட்டிச்சென்று அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினார்.
இந்த விசாரணையில் துப்பாக்கி வைத்திருந்தவர்கள் மல்லிகுட்டை பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் பாலன் (வயது 35) மற்றொருவர் மல்லிகுட்டை அடுத்துள்ள தோட்டக்காரன் கொட்டாய் பகுதியை சேர்ந்த ராஜி மகன் சேகர் (33) என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் நாங்கள் முயல் வேட்டைக்காக துப்பாக்கி கொண்டு சென்றோம் என கூறியுள்ளனர். மேலும் அவர்கள் அனுமதியின்றி கள்ளத்தனமாக துப்பாக்கியை வைத்திருந்தது தெரியவந்தது.
பின்னர் சப்-இன்ஸ் பெக்டர் சம்பத் அவர்கள் இருவரையும் கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து நாட்டுத்துப்பாக்கி மற்றும் அவர்கள் ஓட்டிவந்த இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.