செய்திகள்
நாங்குநேரி அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட்டு
நாங்குநேரி அருகே கோவில் உண்டியலை உடைத்து திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள கிருஷ்ணன்புதூரில் ஊய்காட்டு சுடலை ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 21-ந் தேதி கொடை விழா நடந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவில் மர்ம நபர்கள் கோவில் கதவை உடைத்து உள்ளே புகுந்து, உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடியுள்ளனர்.
மேலும் பூஜை பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளனர். மறுநாள் காலையில் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் கோவிலில் திருட்டு நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து கோவில் நிர்வாகி முத்துவேல் (40) நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கோவிலில் திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.