செய்திகள்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

விருதுநகருக்கு வருகைதரும் முதல்வருக்கு பிரமாண்ட வரவேற்பு- ராஜேந்திர பாலாஜி தகவல்

Published On 2020-02-24 12:04 GMT   |   Update On 2020-02-24 12:04 GMT
பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மார்ச் 1-ந்தேதி விருதுநகருக்கு வருகை தரும் முதல்வர் பழனிசாமிக்கு பிரமாண்டமான வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மார்ச் 1-ந் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று புதிய அரசு மருத்துவக் கல்லூரியை தொடங்கி வைக்க உள்ளார்.

மேலும் புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டியும், முடிவடைந்த திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், சுமார் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.

விழாவிற்கான பிரமாண்ட மேடை அமைத்தல், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பயனாளிகள் அமர்வதற்கான பந்தல், கண்காட்சி அரங்குகள் அமைத்தல், வாகனங்கள் நிறுத்துமிடம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப் பணிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முதல்வருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுப்பது தொடர்பாக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக்கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது.

சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அமைச்சர் பேசும்போது, விருதுநகருக்கு வருகை தரும் முதல்வருக்கு வரலாறு காணாத அளவில் எழுச்சிமிகு வரவேற்பு கொடுக்க வேண்டும். முதல்வரின் வருகை விருதுநகர் மாவட்டத்திற்கு தீபாவளி போன்று கொண்டாட வேண்டும். விருதுநகர் மாவட்ட மக்களின் எழுச்சியை தமிழக முதல்வர் காண வேண்டும். பொது மக்கள், கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு பிரமாண்டமான வரவேற்பு கொடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News