செய்திகள்
கைது

கோவை அருகே கல்லூரி மாணவர் கொலையில் 6 பேர் கும்பல் கைது

Published On 2020-02-21 10:04 GMT   |   Update On 2020-02-21 10:04 GMT
கோவை அருகே கல்லூரி மாணவர் கொலையில் 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை சூலூர் அருகே உள்ள நடு அரசூர் சடையன் தோட்டத்தை சேர்ந்தவர் தனுஷ்கோடி. இவரது மகன் தமிழ் செல்வன் (வயது 20). இவர் காளப்பட்டியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

சம்பவத்தன்று இரவு தமிழ் செல்வன் கல்லூரி படிப்பு சம்பந்தமாக அரசூருக்கு சென்றார். நள்ளிரவு 12 மணியளவில் வீட்டுக்கு நடந்து வந்தார். சரவணம்பட்டி ரோடு சடையன் தோட்டம் அருகே வந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட்டில் பின் தொடர்ந்து வந்த வாலிபர்கள் தமிழ் செல்வனை மிரட்டி அவரது செல்போனை பறிக்க முயன்றனர். ஆனால் தமிழ் செல்வன் செல்போனை கொடுக்க மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் தாங்கள் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து தமிழ் செல்வனின் இடது பக்க மார்பில் குத்தினர். இதில் நிலைகுலைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.

இதனை பார்த்த அந்த வாலிபர்கள் அங்கு இருந்து மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய தமிழ் செல்வன் நடந்த சம்பவம் குறித்து செல்போன் மூலம் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக அவர் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய தமிழ் செல்வனை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு தமிழ் செல்வனை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். கொலை தொடர்பாக 6 பேர் போலீசில் சிக்கினார்கள். அவர்களை போலீசார் கைது செய்தனர்.அவர்களில் 2 பேர் மதுரையை சேர்ந்த கணேஷ், மோகன் என்பதும் மற்றொருவர் 17 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்தது. மற்ற 3 பேர் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை.இவர்கள் 6 பேரும் சிங்காநல்லூர் உப்பிலிப்பாளையத்தில் தங்கி கூலி வேலை செய்து வந்தது தெரிய வந்தது. கஞ்சா போதையில் கல்லூரி மாணவரை கொன்றதாக கைதானவர்கள் தெரிவித்தனர்.அவர்களிடம் இருந்து ஒரு செல்போன், 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

கல்லூரி மாணவர் தமிழ் செல்வன் கொலை நடைபெற்ற சற்று நேரத்தில் அரசூர் வசந்தம் நகரை சேர்ந்த கந்தசாமி மகன் மகாலிங்கத்தை வழி மறித்து முகவரி கேட்பது போல் நடித்த ஒரு கும்பல் மகாலிங்கத்தின் செல்போனை கத்தியை காட்டி மிரட்டி பறிக்க முயன்றது.

செல்போனை கொடுக்க மறுத்த மகாலிங்கத்தின் இடுப்பில் கத்தியால் குத்தி விட்டு அவரது செல்போன் மற்றும் மொபட்டை பறித்து சென்றது. பின்னர் மொபட்டை ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வீசி விட்டு தப்பி விட்டனர்.இந்த சம்பவத்திலும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள 6 பேருக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News