ஏம்பலத்தில் குடிபோதையில் தவறி விழுந்த தொழிலாளி பலி
புதுச்சேரி:
புதுவை முத்துப்பிள்ளை பாளையத்தை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 55). கூலித் தொழிலாளி. இவரது மனைவி கவுரி. இவர்களுக்கு இந்துமதி (23) என்ற மகள் உள்ளார்.
இவர் புதுவையில் உள்ள தனியார் காப்பகத்தில் கணக்காளராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவுரி இறந்து போனார். மனைவி இறந்தது முதல் குப்புசாமி குடி பழக்கத்துக்கு ஆளானார்.
அதிக குடிக்கு அடிமையான குப்புசாமி கடந்த சில நாட்களாக ஏம்பலம் வடக்கு தெருவில் உள்ள தனது தம்பி சேகர் வீட்டில் தங்கி இருந்து வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று குப்புசாமி அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு தனது தம்பி வீட்டுக்கு வந்தார். அப்போது போதையில் குப்புசாமி தடுமாறி விழுந்தார்.
இதில், காயம் அடைந்த குப்புசாமியை அவரது தம்பி குடும்பத்தினர் மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு குப்புசாமி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.