செய்திகள்
திருச்சி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு- 142 பயணிகள் அவதி
தொழில்நுட்ப கோளாறு காரணமாக கோலாலம்பூர் செல்லும் ஏர் ஏசியா விமானம் திருச்சியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
கே.கே.நகர்:
திருச்சியில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, துபாய், சார்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கு நேரடியாக விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அதிக அளவில் பயணிகள் திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்து வருகின்றனர். இதேபோன்று திருச்சியில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர் ஏசியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த விமானமானது தினந்தோறும்காலை 8.55 மணிக்கு திருச்சிக்கு வந்து மீண்டும் திருச்சியில் இருந்து காலை 9.25 மணிக்கு கோலாலம்பூர் நோக்கி புறப்பட்டுச்செல்லும். இந்த விமானம் இன்று காலை 8.35 மணிக்கு திருச்சிக்கு வந்து மீண்டும் திருச்சியிலிருந்து 9.25 மணிக்கு கோலாலம்பூர் நோக்கி புறப்படுவதற்கு தயாராக இருந்தது. அப்போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். இதனைத்தொடர்ந்து உடனடியாக விமானத்தை சரிசெய்யும் பணி துவங்கியது.
இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த 142 பயணிகளும் காத்திருந்தனர். இதனால் பயணிகள் பெரும் அவதியை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் இந்த விமானம் புறப்படும் நேரம் விரைவில் அறிவிக்கப்படும் என விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.