செய்திகள்
கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை படத்தில் காணலாம்.

கும்பகோணத்தில் குடிநீரில் கழிவுநீர் கலப்பால் 7 பேருக்கு வாந்தி-மயக்கம்

Published On 2020-02-18 12:16 GMT   |   Update On 2020-02-18 12:16 GMT
கும்பகோணத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் 7 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கும்பகோணம்:

கும்பகோணம் மாதுளம் பேட்டை ஆணைக்காரன் பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாக நகராட்சி விநியோகம் செய்யும் குடிநீர் குழாயில் அம்ரூத் திட்டத்துக்காக தோண்டப்பட்ட கழிவு நீர் குழாயில் கசிவு ஏற்பட்டு குடிநீரோடு கலந்து வந்ததாகவும், குடிநீர் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். ஆனால் நகராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.

இந்த நிலையில் அதே பகுதியில் கழிவுநீர் கலந்து சென்ற குடிநீரை குடித்ததால் பிச்சைமணி மகள் பவதாரணி(வயது 22), சக்கரவர்த்தி மகள் சசிகலா(17), ரவிச்சந்திரன் மகள் ரேணுகா (42), வாசு மனைவி ஆனந்தி (45), பழனியப்பன் (53), மாரிமுத்து (62), சரவணன் மகள் கீர்த்தனா (8) ஆகியோர் நேற்று மதியம் குடிநீரை பருகியதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நகராட்சி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News