செங்கிப்பட்டி அருகே தாய்- மகனை வெட்டிய விவசாயி கைது
வல்லம்:
தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டி அருகே உள்ள காதாடிப்பட்டியை சேர்ந்த சுப்ரமணியன் என்பவரின் மகன் திவாகர் (30).
நேற்று முன்தினம் திவாகர் அவருடைய வயலில் அறுவடை செய்வதற்காக அறுவடை இயந்திரத்தை காதாடிப்பட்டி வடக்குத்தெரு வழியாக கொண்டு சென்றதாக தெரிகிறது. அப்போது அதே தெருவை சேர்ந்த விவசாயியான சக்திவேல் என்பவர் அறுவடை எந்திரத்தை திவாகருடைய வயலுக்கு அந்த வழியாக கொண்டு செல்வதை தடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சக்திவேல் திவாகரையும் அவருடைய தாய் சுமதியையும் அரிவாளால் வெட்டி உள்ளார்.
இதில் படுகாயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து திவாகருடைய தாய் சுமதி(45) அளித்துள்ள புகாரின் பேரில் செங்கிப்பட்டி இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலிசார் சக்திவேல்(40) மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.