ஆனைமலை அருகே வாகனம் முந்தி செல்வதில் தகராறு- 7 வாலிபர்கள் கைது
கோவை:
கோவை மாவட்டம் ஆனைமலை முக்கோணம் பகுதியில் நேற்று இரவு லாரி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த சில வாலிபர்கள் திடீரென ரோட்டின் நடுவே வாகனத்தை நிறுத்தி பொதுமக்களுக்கு இடையூறாக தகராறில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளானார்கள். இதுகுறித்து அங்கிருந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த வாலிபர்களை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் ஆனைமலை பகுதியைச் சேர்ந்த முருகானந்தம், ஜெயக்குமார், ஆனந்த், விஜய், ஜெகதீஷ், சங்கர் மற்றும் உடுமலையை சேர்ந்த கிரண்குமார் என்பது தெரியவந்தது. வாகனத்தை முந்திச் செல்வதில் இவர்களுக்கிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் நடுரோட்டில் வாகனத்தை நிறுத்தி தகராறில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் அவர்கள் 7 பேர் மீதும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாக வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.