சென்னையில் 15 இடங்களில் புதிய மேம்பாலங்கள்- மாநகராட்சி திட்டம்
சென்னை:
சென்னையில் வாகன பெருக்கத்தால் தினமும் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. சாலை சந்திப்புகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கின்றன. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.
சென்னையில் வாகன பெருக்கத்தால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி, காற்று மாசுவை குறைக்க மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் போக்கு வரத்து நெருக்கடியை குறைக்க சென்னையில் 15 இடங்களில் புதிய மேம்பாலங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளனர். நந்தனம், தேனாம்பேட்டை, ஐ.சி.எப்., சிந்தாமணி, அயனாவரம், ஓட்டேரி, ஆர்.ஏ.புரம், பேசின் பிரிட்ஜ், கிரீன்வேஸ் சாலை, எஸ்.ஆர்.பி. டூல்ஸ், குருநானக் கல்லூரி உள்ளிட்ட 15 சாலை சந்திப்புகளில் புதிய மேம்பாலங்கள் மாநகராட்சி சார்பில் அமைக்கப்படுகிறது. இந்த புதிய மேம்பாலங்கள் ரூ.1500 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு தமிழக அரசு விரைவில் அனுமதி வழங்க உள்ளது.
புதிய மேம்பாலம் அமைப்பதற்காக நிலம் கையப்படுத்தும் பணி விரைவில் தொடக்கப்பட இருக்கிறது. இந்த மேம்பாலங்கள் குறைந்த செலவில் குறுகியதாக அமைக்கப்படுகிறது.
புதிய மேம்பாலங்கள் அமைப்பதன் மூலம் சாலை சந்திப்புகளில் ஏற்படும் கார்பன்டை ஆக்சைடு உள்ளிட்ட பிற காற்று மாசுக்கள் குறைக்கப்படும்.
பொதுமக்களுக்கு விரைவான போக்குவரத்து சேவை வழங்கப்படும் என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.