செய்திகள்
கைது செய்யப்பட்ட புஷ்பதாஸ்

நடத்தையில் சந்தேகம் - கணவன் தீ வைத்து எரித்த பெண் பலி

Published On 2020-02-18 06:57 GMT   |   Update On 2020-02-18 06:57 GMT
நாகர்கோவில் அருகே நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவியை தீ வைத்து எரித்த சம்பவம் தொடர்பாக கணவரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:

ஆரல்வாய்மொழி அருகே தோவாளை புதூர் பகுதியை சேர்ந்தவர் புஷ்பதாஸ். கூலி தொழிலாளி. இவரது மனைவி இரக்கம்.

இவர்களுக்கு 2 மகள் உள்ளனர். ஒருவருக்கு திருமணம் ஆகிவிட்டது. மற்றொருவர் வெளியூரில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலைபார்த்து வருகிறார். கணவன்-மனைவி மட்டும் இங்கு வசித்து வந்தனர்.

புஷ்பதாசிற்கு, மனைவி இரக்கத்தின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த புஷ்பதாஸ், மனைவி உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்தார்.

உடல் கருகிய அவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கணவர் தான் தன்னை தீ வைத்து எரித்ததாக அவர், மாஜிஸ் திரேட்டிடமும் வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து ஆரல்வாய் மொழி போலீசார் புஷ்ப தாஸ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த இரக்கம் இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு உள்ளது.

கைது செய்யப்பட்டு உள்ள புஷ்பதாஸ் போலீசாரிடம் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான் வேலைக்கு சென்றுவிட்டு வரும்போது எப்போதும் எனது மனைவி செல்போனில் பேசிக் கொண்டிருப்பார். இது தொடர்பாக எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சில நேரங்களில் அவர் வீட்டில் இருப்பதில்லை. இதனால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

செல்போனில் பேசுவது குறித்து நான் கேட்டால் அவர் சரியாக பதில் சொல்ல மாட்டார். சந்தேகம் அடைந்த நான் அவரை பலமுறை கண்டித்தேன். சம்பவத்தன்றும் எங்களுக்கு இடையே இந்த பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. என்னை எனது மனைவி தகாத வார்த்தைகளால் பேசினார். ஆத்திரம் அடைந்த நான் அவரது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News