கோவையில் வெவ்வேறு விபத்தில் வாலிபர் உள்பட 3 பேர் பலி
கோவை:
கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் நஞ்சப்பன் (வயது 72). இவர் சம்பவத்தன்று பாலக்காடு- சேலம் பைபாஸ் ரோடு மதுக்கரை எம்.ஜி.ஆர் நகர் அருகே நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் நஞ்சப்பன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகிறார்கள்.
இதேபோன்று கேரள மாநிலம் ஆட்டையாம்பதி ரைமன்ராஜ் (43). இவர் அப்புச்சி கவுண்டன்பதியில் இருந்து உடுமலைக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். கே.ஜி.சாவடி அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த மின்கம்பத்தில் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து கே.ஜி.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சியை சேர்ந்தவர் அஜித்குமார் (21). தனியார் கம்பெனி ஊழியர். இவர் கோவையில் இருந்து அவினாசிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். நீலாம்பூர் அருகே சென்றபோது எதிரே வந்த மொபட் மீது மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட அஜித்குமார் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.