செய்திகள்
தற்கொலை

ஆனைமலை அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

Published On 2020-02-14 11:21 GMT   |   Update On 2020-02-14 11:21 GMT
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் டீசல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.
கோவை:

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள தாத்தூரை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி கவுசல்யா (வயது 19). இவர்கள் 2 பேரும் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 1½ வருடங்கள் ஆகியும் கவுசல்யா கர்ப்பமாகவில்லை. இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கவுசல்யா கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து டீசலை தனது உடலில் ஊற்றி தீ பற்ற வைத்தார். கண்இமைக்கும் நேரத்தில் தீ அவரது உடல் முழுவதும் பரவியது. வலி தாங்க முடியால் கவுசல்யா சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயில் இருந்து கவுசல்யாவை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியில் கவுசல்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 1½ வருடத்தில் கவுசல்யா தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News