தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தியவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம்- கலெக்டர் நடவடிக்கை
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம், சக்கரக்கோட்டை ஊராட்சி, பாரதிநகர் பகுதியில் உள்ள கடைகளில், மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
தடை செய்துள்ள ஒரு முறை மட்டுமே பயன் படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் ஏதும் பயன் படுத்தப்படுகிறதா என்பது குறித்து அவர் ஆய்வு செய்தார்.
இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொண்ட அதிரடி சோதனையில் நகராட்சி பகுதிகளில் 222 கிலோ பேரூராட்சியில் 193 கிலோ, ஊராட்சியில் 169 கிலோ தடை செய்யப்பட்டது. மேலும் அதனை பயன்படுத்தியவர்களுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட 1 லட்சத்து 23 ஆயிரத்து 850 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து கலெக்டர் வீரராகவராவ் கூறியதாவது:-
பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுப் புற சூழலுக்கு உகந்த பொருட்களை பயன் படுத்துவதன் அவசியம் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேற்று மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்கள், 7பேரூராட்சிகள் மற்றும் 4 நகராட்சிகள் என அனைத்துப் பகுதிகளிலும் அந்தந்த உள்ளாட்சி அமைப்பு சார்ந்த அலுவலர்கள் மூலமாக பிளாஸ்டிக் பொருள் பயன்பாடு குறித்த ஆய்வு, பறிமுதல் நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கேசவதாசன், ராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் விஸ்வநாதன், ராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், ஸ்டெல்லா உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.