செய்திகள்
கொடைக்கானல் அருகே 10 கிலோ கஞ்சாவுடன் பெண் கைது
கொடைக்கானல் மேல்மலை கிராமம் கவுஞ்சியில் 10 கிலோ கஞ்சாவுடன் பெண் கைது செய்யப்பட்டார்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மேல் மலை கிராமப் பகுதியான குண்டு பட்டியில் இரண்டு நாட்களுக்கு முன் நடந்த போதை விருந்தில் பல்வேறு போதைப் பொருட்களுடன் கஞ்சா பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனையடுத்து மேல்மலை கிராமங்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நேற்று மேல்மலை கிராமம் கவுஞ்சியில் கஞ்சா விற்கப்படுவதாக கொடைக்கானல் போலீஸ் நிலையத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து கொடைக்கானல் டி.எஸ்.பி. ஆத்மநாதன் உத்தரவின்படி காவல் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது 10 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த துரைச்சாமி என்பரின் மனைவி பஞ்சு (வயது 48) என்பவரை பிடித்தனர். மேலும் அவரை கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இவர் எங்கிருந்து கஞ்சாவை வாங்கி வந்தார். இதன் பின்னணியில் உள்ள நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.