செய்திகள்
வாலிபர் உயிரிழப்பு

பாகூர் அருகே வாலிபர் மர்ம மரணம்- போலீசார் விசாரணை

Published On 2020-02-06 10:04 GMT   |   Update On 2020-02-06 10:04 GMT
பாகூர் அருகே வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாகூர்:

பாகூர் அருகே குருவி நத்தம் பாரதி நகரை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி பாக்கியவதி. இவர்களது மகன் பார்த்திபன் (வயது 32). இவரும் தூக்கணாம்பாக்கத்தை சேர்ந்த சுடர்விழி என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதுபோல் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இது தொடர்பாக கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் பார்த்திபனை விட்டு பிரிந்து சுடர்விழி வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த பார்த்திபன் குடிப்பழக்கத்துக்கு ஆளானார். அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்ததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பார்த்திபனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதற்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற பார்த்திபன் அதன் பிறகும் வேலைக்கு எதுவும் செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற பார்த்திபன் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தாய் பாக்கியவதி செல்போனில் தொடர்பு கொண்டபோது பார்த்திபன் செல்போனை எடுத்து பேசவில்லை.

இந்த நிலையில் நேற்று இரண்டாயிரம் கிராமம் செல்லும் வழியில் முத்து நாராயணன் என்பவரது நிலத்தில் பார்த்திபன் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக பாக்கியவதிக்கு தகவல் கிடைத்தது.

இதுகுறித்து பாக்கியவதி பாகூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்கு பதிவு செய்து மனைவி பிரிந்து சென்ற வேதனையில் பார்த்திபன் அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து போனாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News