செய்திகள்
ஐகோர்ட் மதுரை கிளை

சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தலில் தேவியின் வெற்றியே செல்லும்- ஐகோர்ட் மதுரை கிளை தீர்ப்பு

Published On 2020-02-06 05:38 GMT   |   Update On 2020-02-06 05:38 GMT
சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தலில் முதலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட தேவியின் வெற்றியே செல்லும் என ஐகோர்ட் மதுரை கிளை தீர்ப்பு வழங்கி உள்ளது.
மதுரை:

சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் பஞ்சாயத்து தேர்தலில் தேவி, பிரியதர்ஷினி ஆகியோர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையின்போது தேவி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் பிரியதர்ஷினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

தேர்தல் முடிவை எதிர்த்து தேவி, ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். பிரியதர்ஷினி தலைவராக பதவி ஏற்க தடை விதிக்க வேண்டும் என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். தேவியின் மனு மீது நீதிபதிகள் புகழேந்தி, சுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவியாக பிரியதர்ஷினி பதவி ஏற்க இடைக்கால நீதிபதிகள் தடை விதித்தனர். அதன்பின்னர் வழக்கு விசாரணை நடைபெற்றது.

இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். முதலில் அறிவிக்கப்பட்ட தேவியின் வெற்றியே செல்லும் என்றும், பிரியதர்சினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது செல்லாது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

Tags:    

Similar News