வளசரவாக்கத்தில் என்ஜினீயர் வீட்டில் 131 பவுன் நகைகள் கொள்ளை
போரூர்:
வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் ராதா நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது48). என்ஜினீயர். இவர் பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தில் 25 வருடமாக வேலை பார்த்து வருகிறார். ஆறுமுகம் நேற்று இரவு மனைவி சித்ரகலா, மகள் நிவேதா ஆகியோருடன் இரவு உணவு சாப்பிட வெளியே சென்றார்.
இரவு 11.30மணி அளவில் வீடு திரும்பிய போது வீட்டின் கிரில் கேட் மற்றும் முன்கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது முதல் தளத்தில் உள்ள மர பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 131 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஆறுமுகம் வளசரவாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் உதவி கமிஷனர் மகிமை வீரன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அமுதா ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கொள்ளை நடந்த வீட்டிற்கு மோப்ப நாய் ஜான்சிராணி வரவழைக்கப்பட்டு மோப்பம் பிடித்தது. கைரேகை நிபுணர்கள் சிவா தலைமையில் ஆய்வு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான டி.வி.ஆரையும் உடைத்து எடுத்து சென்றுள்ளனர்