செய்திகள்
கைது

திருப்பூர் வாலிபர் கொலையில் நண்பர்கள் 2 பேர் கைது

Published On 2020-01-28 09:57 GMT   |   Update On 2020-01-28 09:57 GMT
திருப்பூர் வாலிபர் கொலையில் நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்:

திருப்பூர் பட்டுக்கோட்டையார் நகரை சேர்ந்த அருமை தம்பியின் மகன் அருண்குமார் (வயது 23). இவர் கடந்த 17-ந் தேதி இரவு வீட்டில் இருந்தபோது தனது நண்பர்கள் அழைப்பதாக கூறி விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார்.

இந்தநிலையில் கடந்த 19-ந் தேதி காலை வெள்ளியங்காடு ஈஸ்வரமூர்த்தி நகர் பூளைக்காடு தோட்டத்தில் அருண்குமார் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். கழுத்து, தலை உள்ளிட்ட பகுதிகளில் பயங்கரமான வெட்டுக்காயங்களும், உடலில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து காயங்களும் இருந்தன. மேலும் அவருடைய கை கட்டப்பட்டு, வாயில் துணி திணிக்கப்பட்டு இருந்தது.

அருண்குமாரின் நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் அவர் கொலை செய்யப்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இந்தநிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக திருப்பூர் கரைத்தோட்டத்தை சேர்ந்த கஜேந்திரன், முனியப்பன் ஆகிய 2 பேரை தெற்கு போலீசார் ஏற்கனவே கைது செய்தனர்.

இவர்கள் இருவரும் திருப்பூர் மாநகராட்சியில் தற்காலிக துப்புரவு தொழிலாளர்கள் ஆவார்கள். கொலைக்கு சதித்திட்டம் தீட்டியதாக அவர்கள் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை தேடி வந்தனர்.

இந்தநிலையில் ரகசிய தகவலின் பேரில் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் அருண்குமாரின் நண்பர்களான கரைத்தோட்டத்தை சேர்ந்த பிரேம்குமார் (24), ஜான் (23) ஆகியோரை பிடித்தனர்.

கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பிரேம்குமார், ஜான் ஆகிய 2 பேரையும் தெற்கு போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News