தூத்துக்குடியில் பூட்டிய வீட்டை உடைத்து நகை கொள்ளை
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள தெய்வச்செயல்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி சுப்புலெட்சுமி(வயது 44). இவர் அப்பகுதியில் கூலி வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று சுப்புலெட்சுமி காலையில் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். மாலையில் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அவர் தனது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே இதுகுறித்து புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் அங்கு வந்த போலீசார் வீட்டிற்குள் சென்று சோதனை செய்தனர். அப்போது வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 8½ பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.