செய்திகள்
தீக்குளித்து தற்கொலை

அய்யம்பேட்டை அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

Published On 2020-01-25 09:54 GMT   |   Update On 2020-01-25 09:54 GMT
அய்யம்பேட்டை அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அய்யம்பேட்டை:

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவில் வெள்ளாள தெருவைச் சேர்ந்தவர் ராஜாக்கண்ணு. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கார்த்திகா (வயது 25). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டிலிருந்த கார்த்திகா திடீரென தனது உடலில் மண் எண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். தீ உடல் முழுவதும் பரவிய நிலையில் , ‘‘காப்பாற்றுங்கள்..காப்பாற்றுங்கள்’’ என அலறினார். அப்போது அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த கார்த்திகாவின் கணவர் ராஜகண்ணுவின் நண்பர் இலுப்பக்கோரையைச் சேர்ந்த கலியமூர்த்தி என்பவர் கார்த்திகாவின் உடல் மீது பிடித்த தீயை அணைக்க முயன்றார். அப்போது கலியமூர்த்திக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

இதுபற்றி தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று பலத்த காயமடைந்த கார்த்திகா, கலியமூர்த்தி இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திகா பரிதாபமாக நேற்று இறந்தார்.

பலத்த தீக்காயமடைந்த கலியமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். இது குறித்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகால்சோழன், சப் -இன்ஸ்பெக்டர் உமாபதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கார்த்திகாவுக்கு திருமணமாகி 7 ஆண்டுகளே ஆவதால் தஞ்சாவூர் ஆர்.டி. ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News