கும்பகோணம் அருகே அ.ம.மு.க. பிரமுகர் மிரட்டலால் தாய் தற்கொலை முயற்சி
கும்பகோணம்:
பந்தநல்லூர் அருகே நெய்க்குப்பை பகுதியை சேர்ந்தவர் ராஜா. விவசாயி. இவரது மனைவி மைதிலி (வயது 57). இவர்களது மகளுக்கு வரும் 27-ந் தேதி திருமணம் நடக்க உள்ளது. மகன் சதீஷ் மாற்றுத்திறனாளி.
இதே பகுதியைச் சேர்ந்தவர் கருணாநிதி. சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அ.ம.மு.க சார்பில் போட்டியிட்டு ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளார்.
மாற்றுத் திறனாளி மகன் சதீஷ் சிகிச்சைக்காக கருணாநிதியிடம் மைதிலி ரூ. 4 லட்சம் வாங்கியதில் ரூ.2 லட்சம் மட்டுமே திருப்பி செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஆனால் தனக்கு வட்டியுடன் சேர்த்து ரூ. 15 லட்சம் தர வேண்டும். அதை கொடுக்காவிட்டால் மகளின் திருமணத்தை நிறுத்தி விடுவேன் என கருணாநிதி தொடர்ந்து மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதனால், மகளின் திருமணம் நின்று விடுமோ என்று மனமுடைந்த மைதிலி பூச்சி மருந்து குடித்துள்ளார்.
மயங்கிய நிலையில் கிடந்த அவரை கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து கும்பகோணம் புறக்காவல் நிலையம் மற்றும் பந்தநல்லூர் போலீசில் ராஜா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.