செய்திகள்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு- 3 பேர் கைது
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக 3 பேரை கைது செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தேர்வு எழுதியவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தேர்வாணையம் தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 5-ந் தேதி சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் பிற மாவட்டங்களிலிருந்து வந்து தேர்வு எழுதியவர்கள் தரவரிசைப்பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் அதிகப்படியாக தேர்வாகியுள்ளதாக செய்தி வெளிவந்தது.
தேர்வாணையம் நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில் 99 தேர்வர்கள் இடைத்தரகர்களின் ஆலோசனையின் பேரில் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் தேர்வு மையங்களைத் தேர்வு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக 3 பேரை இன்று சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரில் ஒருவர் இடைத்தரகர் என சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
முறைகேடு செய்து குருப் 4 தேர்வு எழுதிய 99 பேருக்கும் டிஎன்பிஎஸ்சி வாழ்நாள் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.