செய்திகள்
லஞ்சம்

ஆண்டிப்பட்டியில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் பெற்ற உதவியாளர் சிறையில் அடைப்பு

Published On 2020-01-24 11:25 GMT   |   Update On 2020-01-24 11:25 GMT
ஆண்டிப்பட்டியில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் பெற்ற உதவியாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் தனது நிலத்திற்கான பட்டா மாறுதல் பெறுவதற்காக திம்மரசநாயக்கனூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

பட்டா மாறுதலுக்கு ரூ.30 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என வி.ஏ.ஓ. காளிதாஸ் கேட்டுள்ளார். ஆனால் ரூ.16 ஆயிரம் மட்டும் தருவதாக முத்துப்பாண்டி கூறி உள்ளார்.

அதன்படி ஆண்டிப்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் உள்ள தனது தற்காலிக உதவியாளர் குமாரிடம் பணத்தை கொடுக்குமாறு காளிதாஸ் கூறி உள்ளார்.

ஆனால் லஞ்சம் தர விருப்பம் இல்லாத முத்துப்பாண்டி இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் அறிவுரையின்படி ரசாயனம் தடவிய பணத்தை முத்துப்பாண்டி, குமாரிடம் கொடுத்தார்.

அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் உதவியாளர் குமாரை கையும் களவுமாக பிடித்து சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். காளிதாஸ் பணம் வாங்க சொன்னதால் தான் வாங்கியதாக ஒப்புக்கொண்டதால் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள வி.ஏ.ஓ. காளிதாசை போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அரசு அலுவலர்கள் பெரும்பாலும் நேரடியாக லஞ்சம் வாங்காமல் உதவியாளரை நியமித்து பணம் பெறுகின்றனர். எனவே உதவியாளரின் வாக்குமூலத்தை வைத்து அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

 

 

 

Tags:    

Similar News