செய்திகள்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம்- திமுக கூட்டணி கட்சிகள் முடிவு
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்த திமுக கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளன.
சென்னை:
சென்னையில் இன்று மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். தற்போதைய அரசியல் நிலவரம், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அடுத்தகட்ட போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்போது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பிப்ரவரி 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், ‘சிஏஏ, என்ஆர்சி மற்றும் என்பிஆர் ஆகியவற்றுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடக்க உள்ளது. கையெழுத்து இயக்கத்திற்கு பிறகு அதன் பிரதிகளை ஜனாதிபதிக்கு அனுப்ப உள்ளோம். நேரம் கிடைத்தால் ஜனாதிபதியை நேரில் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்துவோம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.