செய்திகள்
கைது

4 வயது குழந்தைக்கு மது கொடுத்த விவகாரம்- தாயின் கள்ளக்காதலன் கைது

Published On 2020-01-22 04:02 GMT   |   Update On 2020-01-22 04:02 GMT
கிருஷ்ணகிரி அருகே 4 வயது குழந்தைக்கு மது கொடுத்த விவகாரம் தொடர்பாக தாயின் கள்ளக்காதலனை கைது செய்த போலீசார், தாயிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த பாகலூர் ஜீவா நகரை சேர்ந்தவர் மாதேஷ். இவரது மனைவி நந்தினி (வயது27) கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அசோக் (28) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. நந்தினி குடிப்பழக்கத்திற்கும் அடிமையானார். இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்தனர்.

சம்பவத்தன்று நந்தினி மது குடித்து விட்டு கள்ளக்காதலனுடன் ஜாலியாக இருந்தார். அப்போது அருகில் இருந்த குழந்தை அழுது கொண்டே இருந்தது.

இதனால் ஆத்திரமடைந்த நந்தினி, தான் பெற்ற குழந்தைக்கு மது கொடுத்தார். மேலும், குழந்தையை அடித்து உதைத்தார். இதில் வலி தாங்க முடியாமல் குழந்தை கதறி அழுதது. சிறிது நேரத்தில் போதை தலைக்கேறி மயங்கியது.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். பின்னர் குழந்தையை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த குழந்தையை உறவினர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

குழந்தைக்கு மது கொடுத்த விவகாரம் தொடர்பாக ஓசூர் மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இது தொடர்பாக நந்தினியின் கள்ளக்காதலன் அசோக்கை போலீசார் கைது செய்தனர். நந்தினியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News