செய்திகள்
தற்கொலை

கோவை அருகே நிதிநிறுவன அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-01-19 13:32 GMT   |   Update On 2020-01-19 13:32 GMT
கோவை அருகே குடிபழக்கத்தை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த நிதிநிறுவன அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிணத்துக்கடவு:

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் சண்முக சுந்தரம் (வயது50). இவர் வட்டிக்கு பணம் கொடுத்து பணம் வாங்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சின்னதாய். இவர் சிக்கலாம்பாளையத்தில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 11 வயதில் மகன், மகள் உள்ளனர்.

சண்முக சுந்தரத்துக்கு குடிபழக்கம் இருந்துள்ளது. குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் இவர்கள் பொங்கல் பண்டிகையையொட்டி தங்களது சொந்த ஊரான கோவிந்தாபுரத்திற்கு சென்றனர். அன்றைய தினமும் சண்முக சுந்தரம் குடித்து விட்டு வந்தார். இதனை மனைவி சின்னதாய் தட்டிகேட்டார்.

இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சின்னதாய் தனது குழந்தைகளை அழைத்து கொண்டு காமநாயக்கன் பாளையத்தில் உள்ள உறவினரின் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து சண்முகசுந்தரம் மீண்டும் கிணத்துக்கடவிற்கு வந்து தனது தாய், தந்தையுடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாகவே மனைவி பிரிந்து சென்றதை நினைத்து சண்முகசுந்தரம் மன வருத்தத்தில் இருந்தார். நேற்று இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். மனைவி பிரிந்து சென்றதை நினைத்து வருந்திய சண்முகசுந்தரம் வாழ்க்கையில் விரக்தியடைந்து நேற்று இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த கிணத்துக்கடவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சண்முகசுந்தரத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை க்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News