செய்திகள்
பொங்கல் பரிசு தொகுப்பு

விருதுநகர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு நாளை முதல் விநியோகம்

Published On 2020-01-08 09:09 GMT   |   Update On 2020-01-08 09:09 GMT
பொங்கல் பரிசு தொகுப்புகள் நாளை முதல் விநியோகிக்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

2020-ம் ஆண்டு பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி வகை குடும்ப அட்டை தாரர்களுக்கும் தமிழக அரசு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், இரண்டு அடி நீள கரும்புத்துண்டு உள்ளிட்ட பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ஒவ்வொரு குடும்ப அட்டை தாரருக்கும் ரூ. 1000 வழங்கும் திட்டத்தினை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து அரிசி வகை குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் பொங்கல் ரொக்கத்தொகை ரூ. 1000 ஆகியவற்றை நாளை (9-ந்தேதி) முதல் தொடங்கி 12-ந்தேதி வரை வழங்கப்படுகிறது.

விடுபட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 13-ந்தேதி அனைத்து நியாய விலை கடைகளிலும் வழங்கப்பட உள்ளது.

மேற்படி பொங்கல் பரிசுத் தொகுப்பினை அரிசி வகை குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து குடும்பத்தினரும் பெற்றுக்கொள்ளலாம்.

மின்னணு குடும்ப அட்டையினை தவறவிட்ட குடும்ப அட்டைதாரர்கள் அந்த குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர் ஒருவரின் ஆதார் அட்டையினை வைத்தோ அல்லது பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு வரும் ‘ஒருமுறை கடவுச்சொல் அடிப்படையிலோ பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம்.

மக்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் இந்தப் பொங்கல் பரிசினைப் பெற்றுச்செல்ல ஏதுவாக ஒவ்வொரு நியாயவிலை கடைகளிலும் எந்த நாளில் எந்த குடும்பஅட்டைகளுக்கு முன்னுரிமை கொடுத்து பொங்கல் பரிசு வழங்கப்படும் என்ற தகவல் குறித்து விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் சிரமமின்றி பொங்கல் பரிசு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக புகார்களோ அல்லது உதவி ஏதும் தேவைப்படின் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து பயனடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News