செய்திகள்
கோப்பு படம்

வாணரப்பேட்டையில் காவலாளி தூக்கு போட்டு தற்கொலை

Published On 2020-01-04 10:04 GMT   |   Update On 2020-01-04 10:04 GMT
வாணரப்பேட்டை அருகே நோய் கொடுமை தாங்க முடியாமல் காவலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:

புதுவை வாணரப்பேட்டை எல்லையம்மன் கோவில் தோப்பு ரெயில்வே லைன் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. (வயது 52). இவர் பாரதி வீதியில் உள்ள ஒரு வீட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். மகாலட்சுமி வீட்டு வேலை செய்து வந்தார்.

இதற்கிடையே முனுசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் இவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. அதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனாலும், நோய் குணமாகவில்லை. நேற்று காலை மகாலட்சுமி வீட்டு வேலைக்கு சென்று விட்டார். அவரது மகனும் ஓட்டல் வேலைக்கு சென்றார்.

இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த முனுசாமிக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டின் கூரை சவுக்கு கம்பத்தில் மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தொங்கினார்.

வீட்டு வேலை முடிந்து மகாலட்சுமி வீடு திரும்பிய போது, கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே முனுசாமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News