வத்தலக்குண்டுவில் தனியாக இருக்கும் பெண்களை மிரட்டும் டவுசர் வாலிபர்
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு தெற்குத் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் பகல் நேரங்களில் திறந்திருக்கும் வீடுகளில் உள்ளே நுழைந்து விடுகிறார்.
அந்த வீட்டில் ஆண்கள் இருந்தால் வெளியே வந்து விடுவதும் பெண்கள் இருந்தால் அவர்களை மிரட்டி பலாத்காரம் செய்ய முயல்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது. டவுசர் அல்லது ஜட்டி மட்டுமே அணிந்து வீட்டுக்குள் நுழையும் அந்த வாலிபர் அதே பகுதியைச் சேர்ந்தவர் என்று பெண்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் தனியாக இருக்கும் பெண்கள் கதவை திறந்து வைக்கவோ வெளியே வரவோ பீதியடைந்து வருகின்றனர். 2 நாட்களுக்கு முன்பு ஒரு வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பெண்ணை மிரட்டியுள்ளார். அக்கம் பக்கத்தினர் திரண்டு வரவே அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். கடந்த சில நாட்களாக அந்த வாலிபரின் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தெற்குத் தெருவில் கண்காணிப்பு கேமராக்களும் உள்ளது. எனவே போலீசார் கேமராவில் பதிவாகியுள்ள அந்த வாலிபரை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேரங்களில் மட்டுமல்லாது பகல் நேரங்களிலும் இப்பகுதியில் ரோந்து வர வேண்டும்.
அந்த வாலிபரை பிடித்து யாரேனும் புகார் அளித்தால் அவர்கள் குடும்பத்துக்கு அச்சுறுத்தல் வருமோ என்று பயந்து பெண்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.