மன்னார்குடி அருகே வங்கி ஏ.டி.எம். உடைத்து கொள்ளை முயற்சி
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ளது வாட்டார் கிராமம். இக்கிராமத்தில் இந்தியன் வங்கி கிளை அமைந்துள்ளது. இப்பகுதி மக்கள் ஏராளமானோர் இந்த வங்கியில் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இந்த வங்கியின் ஏ.டி.எம். வாட்டார் கடை வீதியில் அமைந்துள்ளது.
இதனை அப்பகுதி மக்கள் மற்றும் வங்கியின் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை கடைத்தெருவிற்கு வந்த பொதுமக்கள் சிலர் வங்கியின் ஏ.டி.எம் வழியே நடந்து சென்றுள்ளனர். அப்போது ஏ.டி.எம். மேல்பாகம் உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் திருக்களார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஏ.டி.எம் அறையை பார்வையிட்டனர். இதில் நள்ளிரவில் மர்மநபர்கள் ஏ.டி.எம்.-ல் பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதும், அப்போது மிஷினை உடைக்க முயன்றபோது மேல்பாகம் மட்டும் உடைக்கப்பட்டதும் தெரியவந்தது.
மேலும் முழுமையாக ஏ.டி.எம்.மை உடைக்க முடியாததால் அவர்கள் தப்பி சென்றிருக்கலாம் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்குள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.