செய்திகள்
வீட்டின் கதவை பூட்ட மறந்து ரூ.1 லட்சத்தை இழந்த அதிகாரி
திருச்சியில் பட்டப்பகலில் வீட்டின் கதவை பூட்ட மறந்த அதிகாரி வீட்டில் ரூ.1 லட்சம் பணத்தை மர்ம நபர் கைவரிசை காட்டியுள்ளார்.
திருச்சி:
திருச்சி தில்லைநகர் 7-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது 64), ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி. இவர் நேற்று மதியம் வீட்டின் முன்பக்க கதவினை பூட்டி விட்டு வெளியே சென்றார். பின்னர் மாலை வீடு திரும்பினார். வீட்டிற்குள் சென்று பார்த்த போது, அறையில் மேஜை மீது வைத்திருந்த பர்சில் இருந்த ரூ.1 லட்சம் திருட்டு போயிருந்ததை கண்டு திடுக்கிட்டார். பின்னர் வீட்டின் பின் பக்கம் சென்றபோது கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
முன்பக்க கதவை பூட்டிய வெங்கட்ராமன், பின்பக்க கதவை பூட்ட மறந்து வெளியே சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர், வீட்டின் பின்புறம் வழியாக வீட்டிற்குள் நுழைந்து பணத்தை திருடி சென்றுள்ளார். பட்டப்பகலில் இந்த கைவரிசையை அரங்கேற்றியுள்ளார்.
இதுகுறித்து வெங்கட்ராமன் தில்லை நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.