கே.புதூரில் போலீஸ்காரரை தாக்கியதாக 3 வாலிபர்கள் கைது
மதுரை:
மதுரை கே.புதூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் ஜெயச்சந்திரபாண்டி. இவர் நேற்று இரவு 120 அடி ரோட்டில் ரோந்து சென்றார். அப்போது அங்கு குமரேசன், குமரன்சேதுபதி, தாமரைச்செல்வம் ஆகியோர் பொதுமக்களுக்கு இடையூறாக நின்று பேசிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீஸ்காரர் ஜெயச்சந்திரபாண்டி கண்டித்தார்.
இதுதொடர்பாக அவர்களுக்கிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது குமரேசன் உள்பட 3 பேரும் சேர்ந்து தன்னை தாக்கியதாக கே.புதூர் போலீசில் ஜெயச்சந்திர பாண்டி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 3 பேரையும் கைது செய்தனர்.
இதேபோல் கரிமேடு கணேசபுரத்தைச் சேர்ந்தவர் மாயாண்டி (75). முடக்குச்சாலையில் கடை வைத்துள்ளார். இவரது கடை அருகே சோலை ராஜா, கே.புதூர் சங்கர் நகர் அங்கையன் (21), ராஜேஷ் குமார் ஆகியோர் நின்று ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்ததால் தான் தாக்கப்பட்டதாக போலீசில் மாயாண்டி புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி அங்கையனை கைது செய்தனர். மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.