பல்லடம் அருகே தனியார் நிறுவன ஊழியர் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள ஆராக்குளத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் ஆனந்த குமார் (26). தனியார் பால் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வரகிறார்.
சம்பவத்தன்று இரவு இவர் தனது காரை வீட்டு முன் நிறுத்தி இருந்தார். அதிகாலை 2 மணியளவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. உடனே ஆனந்த குமார் எழுந்து ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார்.
அப்போது வீட்டு முன் நிறுத்தி இருந்த கார் தீப்பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே ஓடி சென்று தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தார்.
இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் ஆராக்குளம் வந்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது மது பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி தீ பற்றி வைத்து கார் மீது வீசியது தெரிய வந்தது. சொத்து தகராறில் கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? முன் விரோதத்தில் வீசப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கார் அருகே கிடந்த தடயங்களை சேகரித்து அதன் மூலமும் விசாரணை நடைபெற்று வருகிறது.