நாங்குநேரி அருகே தனியாக வசித்த மூதாட்டியின் வீடு புகுந்து நகை திருடிய மர்மநபர்
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள தெய்வநாயகபேரியை சேர்ந்தவர் வேலாயுதம் மனைவி மாடத்தி (வயது 75). கூலி தொழிலாளி. வேலாயுதம் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. இதனால் மாடத்தி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான 2 ¾ பவுன் எடையுள்ள செயின், கம்மல், ஜிமிக்கி, மூக்குத்தி ஆகியவற்றை ஒரு மணிபர்சில் வைத்து வீட்டு பீரோவில் வைத்திருந்தார். பீரோவை பூட்டி சாவியை பீரோ மீதே வைத்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று மகள் வீட்டிற்கு செல்வதற்காக புறப்பட்ட போது மாடத்தி பீரோவை திறந்து பார்த்தார். அப்போது அங்கு தங்கநகைகள் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். திருடப்பட்ட தங்கநகைகளின் மதிப்பு ரூ. 55 ஆயிரம் ஆகும். அவரது வீட்டிற்கு அதே ஊரை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். எனவே அவர் தான் பீரோவை திறந்து நகைகளை திருடியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இது குறித்து புகாரின் பேரில் மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாயமான ஆறுமுகத்தையும் தேடி வருகின்றனர்.