மார்த்தாண்டம் அருகே திருமணம் ஆகாத வருத்தத்தில் வாலிபர் தற்கொலை
குழித்துறை:
மார்த்தாண்டத்தை அடுத்த மருதங்காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ரதீஷ் குமார் (வயது 31). தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை.
மேலும் குடித்துவிட்டு சரியாக வேலைக்கு செல்லாமலும் இருந்து வந்தார். இதனை அவரது பெற்றோர் கண்டித்துவந்தனர். ரதீஷ் குமாருக்கு பெண் பார்த்துவந்த நிலையில் அவருக்கு மணப் பெண் அமையவில்லை. இதில் மன வருத்தத்துடன் காணப்பட்டு வந்தார். மேலும் அவர் யாருடனும் பேசாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் பின் பகுதியில் விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக்கிடந்தார். வீடு திரும்பிய பெற்றோர் ரதீஷ்குமார் மயங்கிக்கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவரை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் தேவதாஸ் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.