செய்திகள்
அரசியலமைப்பு தினத்தில் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் -மு.க.ஸ்டாலின் டுவீட்
அரசியலமைப்பு தினமான இன்று மகாராஷ்டிரா வழக்கில் உச்ச நீதிமன்றம் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை:
மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க ஆயத்தமான நிலையில், திடீரென பாஜக ஆட்சியமைத்தது.
பாஜக ஆட்சியமைப்பதற்கு அழைப்பு விடுத்த ஆளுநரின் முடிவுக்கு எதிராக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மகாராஷ்டிர சட்டசபையில் முதல்வர் பட்னாவிஸ் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
அரசியலமைப்பு தினமான இன்று வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பை எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு தினத்தில், சிறப்புமிக்க தீர்ப்பினை அளித்துள்ளது.
ஜனநாயகத்துடனும், அரசியல் சட்டத்துடனும் விபரீத விளையாட்டு நடத்தும் பாஜக அரசு இனியாவது திருந்த வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.