செய்திகள்
விபத்து

திருமங்கலம் அருகே திருமண கோஷ்டி சென்ற கார் விபத்தில் சிக்கியது- சிறுவன் பலி

Published On 2019-11-24 17:36 GMT   |   Update On 2019-11-24 17:36 GMT
திருமண கோஷ்டியினர் சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 7 வயது சிறுவன் பலியானான்.

திருமங்கலம்:

மதுரை கப்பலூரைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகள் திருமணம் இன்று உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டியில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக கண்ணனின் உறவினர்கள் 2 டிரக்கர்களில் குடும்பம் குடும்பமாக புறப்பட்டனர்.

கப்பலூரைச் சேர்ந்த சிவன் (வயது 28) ஒரு டிரக்கரை ஓட்டினார். அதில் சுமார் 15 பேர் இருந்தனர்.

உரப்பனூர் கரடிக்கல் இடையே சென்றபோது அந்த டிரக்கர், டிரைவர் சிவனின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

டிரக்கரில் வந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கூச்சலிட்டனர். அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் அஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்தில் ஜெயக்குமார் என்பவரது மகன் சக்திவேல் (7) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானான். இவன், தாயார் ரேவதியுடன் திருமண வீட்டிற்கு சென்றான்.

விபத்தில் காயம் அடைந்த ரேவதி (39) நந்தினி (16) பாண்டியம்மாள் (42) முத்தையா (33) செல்வி (33) அவரது மகள் சிவரஞ்சனி (14), ஜோதி (43), விஷ்வா (4), லகன் (2), தீபா (35) அவரது மகன் வசந்த் (13) ஆகியோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News