செய்திகள்
தற்கொலை

சங்கரன்கோவிலில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2019-11-24 12:12 GMT   |   Update On 2019-11-24 12:12 GMT
சங்கரன்கோவிலில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை:

சங்கரன்கோவில் அண்ணா நகரை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகன் கந்தவேல்(வயது 25). இவருக்கும் சாத்தூரை சேர்ந்த கிருஷ்ணவேணி என்பவருக்கும் கடந்த 2 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. மேலும் இவர்களுக்கு 9 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது.

கந்தவேல் அப்பகுதியில் கடை வைத்துள்ளார். இவர்கள் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். ஆனால் கிருஷ்ணவேணிக்கு கூட்டு குடும்பமாக வாழ பிடிக்காததால் அடிக்கடி அவர்களுக்குள் சண்டை வந்துள்ளது. இதனால் கந்தவேல் தனது மனைவியை சாத்தூரில் உள்ள தனது மாமனார் வீட்டில் கொண்டு சென்று விட்டுள்ளார்.

இந்நிலையில் கந்தவேல் தனது பழைய கடையை இடித்துவிட்டு, புதிதாக கடையை கட்டினார். அதற்கான திறப்பு விழா நாளை நடைபெற உள்ள நிலையில் கந்தவேல் தனது மனைவியை போனில் வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவர் நேரில் அழைத்தால் தான் வருவேன் என்று கூறிவிட்டார்.

இதில் மனமுடைந்த கந்தவேல் தான் புதிதாக கட்டியிருக்கும் கடையிலேயே நேற்று மாலை தூக்குப்போட்டு கொண்டார். இதற்கிடையே கணவருக்கு கிருஷ்ணவேணி வெகுநேரம் போன் செய்தும் அவர் எடுக்காததால் தனது தாயை அழைத்து கொண்டு சாத்தூரில் இருந்து சங்கரன்கோவில் வந்தார்.

பின்னர் புதிய கடைக்கு சென்று பார்த்த கிருஷ்ணவேணி அங்கு தனது கணவர் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து கதறி அழுதார். இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த சங்கரன்கோவில் போலீசார் கந்தவேல் உடலை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News