செய்திகள்
கோப்பு படம்

பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டி மகளை மீட்ட வீரத்தாய்

Published On 2019-11-21 12:01 GMT   |   Update On 2019-11-21 12:01 GMT
9-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டி தனது மகளை தாய் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கல்லூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் 13 வயது மகள் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று சிறுமியின் தாயார் தோட்ட வேலைக்கு சென்று இருந்தார். அப்போது அவரை பார்க்க அந்த சிறுமி வந்தார். அந்த நேரத்தில் அங்கு வந்த சிறுமியின் உறவுக்கார வாலிபரான ராஜசேகர் (22) என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றார். அதிர்ச்சியடைந்த சிறுமி அலறினார். அவரது சத்தத்தை கேட்டு தாயார் வயலில் இருந்து ஓடி வந்தார். அவர் மீது ராஜசேகர் கல்லை தூக்கி போட்டார். இதில் அவரது காலில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்தாலும் மகளை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் மீண்டும் வயலுக்கு சென்ற சிறுமியின் தாயார் சோளத்தட்டு அறுக்க வைத்து இருந்த அரிவாளை எடுத்து வந்து ராஜசேகரை வெட்டினார். இதில் அவருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டது. சிறுமியின் தாயார் சத்தத்தை கேட்டு கிராம மக்களும் ஓடி வந்தனர். அவர்கள் ராஜசேகரை பிடித்து ஊத்தங்கரை போலீசில் ஒப்படைத்தனர்.

இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின்கீழ் ராஜசேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடனடியாக இந்த வழக்கு பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இன்ஸ்பெக்டர் கற்பகம் வழக்கு பதிவு செய்து ராஜசேகரை கைது செய்தார். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தார்.

கைதான ராஜசேகர் ஊத்தங்கரை பகுதியில் உள்ள கல்லூரியில் முதுகலை 2-ம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News