செய்திகள்
பீரோல் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடப்பதை படத்தில் காணலாம்.

திசையன்விளையில் என்ஜினீயர்-லாரி அதிபர் வீட்டில் கொள்ளை

Published On 2019-11-20 12:50 GMT   |   Update On 2019-11-20 12:50 GMT
திசையன்விளையில் ஒரே நேரத்தில் 2 வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திசையன்விளை:

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் கன்சிஸ் ராஜா (வயது 43). இவரது மனைவி ஜெனிதா. கன்சிஸ் ராஜா பெங்களூரில் தங்கியிருந்து என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் சென்னையில் வசித்து வருகின்றனர்.

இதையடுத்து ஜெனிதாவின் தந்தை ஜெயராஜ் தனது குடும்பத்துடன் வாழைத்தோட்டத்தில் உள்ள வீட்டில் தங்கியிருந்து பராமரித்து வருகிறார். இந்நிலையில் ஜெயராஜ் தனது சொந்த ஊரான திசையன்விளை அருகே உள்ள பூச்சிக்காட்டில் உள்ள கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் சென்றார்.

பின்னர் திருவிழா முடிந்து இன்று அதிகாலை வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த ரூ. 5 ஆயிரம் பணம், எல்.இ.டி. டி.வி. மற்றும் பொருட்கள் கொள்ளை போயிருந்தது.

ராஜாவின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவர் சென்னையில் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். இதனால் குடும்பத்துடன் அங்கு தங்கி வசித்து வருகிறார். இதையடுத்து அவரது தந்தை பால்ராஜ் என்பவர் அவ்வப்போது வந்து மகன் வீட்டை பார்த்து செல்வார். இந்நிலையில் மர்ம நபர்கள் அலெக்சாண்டர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே இருந்த பித்தளை பாத்திரம் உள்ளிட்ட பொருட்களை தூக்கி சென்றுள்ளனர்.

அடுத்தடுத்த 2 வீட்டில் கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் குறித்து தகவலறிந்த திசையன்விளை இன்ஸ் பெக்டர் ஜூலி மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

ஒரே நேரத்தில் 2 வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் திசையன்விளையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

Similar News